ஐபிஎல்: பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் ரன்மழை பொழிந்த கொல்கத்தா, 245 ரன்கள் குவித்தது

பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 245 ரன்கள் குவித்துள்ளது. #IPL #KKR
ஐபிஎல்: பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் ரன்மழை பொழிந்த கொல்கத்தா, 245 ரன்கள் குவித்தது
Published on

இந்தூர்,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44-வது லீக் ஆட்டம் இந்தூரில் நடைபெறுகிறது. இப்போட்டியில் அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின்னும், சுனில் நரைனும் களம் இறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே பஞ்சாப் அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். குறிப்பாக சுனில் நரைன் பேட்டிங்கில் அனல் பறந்தது. அவரது பேட்டில் பட்ட பந்துகள் நாலாபுறமும் சிதறி ஓடின. இதற்கிடையில், கிறிஸ் லின் 27 ரன்கள் (17 பந்துகள்) ஆட்டமிழந்தார். களத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய சுனில் நரைன் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். 36 பந்துகளை எதிர்கொண்ட சுனில் நரைன் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

அடுத்து வந்த வீரர்களான உத்தப்பா (24 ரன்கள்), ரஸ்ஸல் (31 ரன்கள்) கணிசமான பங்களிப்பை அளித்தனர். கடைசி கட்ட ஓவர்களில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார். 23 பந்துகளில் 50 ரன்கள் அடித்த நிலையில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு பஞ்சாப் அணிக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான் ஆகும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com