

ஆக்லாந்து,
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. பகல்-இரவு டெஸ்ட் போட்டியான இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 58 ரன்களில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி தொடக்க நாளில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கனே வில்லியம்சன் 91 ரன்களுடனும், ஹென்றி நிகோல்ஸ் 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வில்லிம்சன் தனது 18-வது சதத்தை நிறைவு செய்தார். 27 வயதான வில்லியம்சன் ஆடும் 64-வது டெஸ்ட் இதுவாகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்து வீரர்களில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்தார். மார்ட்டின் குரோவ், ராஸ் டெய்லர் தலா 17 சதங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.
சிறிது நேரத்தில் வில்லியம்சன் (102 ரன், 220 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். நியூசிலாந்து அணி 92.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் 2-வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. நேற்றைய தினம் வெறும் 23.1 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டன. 3-வது நாளான இன்றும் மழை குறுக்கிடுவதற்கு வாய்ப்புள்ளது.