ஹேசில்வுட் மட்டுமல்ல.. மற்றொரு ஆஸி.வீரரும் ஐ.பி.எல். தொடருக்கு திரும்புவதில் சிக்கல்..?

போர்ப்பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். மீண்டும் தொடங்க உள்ளது.
சிட்னி,
10 அணிகள் பங்கேற்ற 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியை தொடர்ந்து பாகிஸ்தான் தீவிர தாக்குதலில் ஈடுபட்டதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
இதனால் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. நேற்று முன்தினம் அறிவித்தது. இதனையடுத்து 10 அணிகளில் அங்கம் வகிக்கும் இந்திய வீரர்கள் தங்களது வீடுகளுக்கு உடனடியாக திரும்பினர். வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்கு விமானம் மூலம் கிளம்பினர். ஒரு சிலரை தவிர எல்லோரும் தாயகம் திரும்பி விட்டனர்.
தற்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்து வந்த தாக்குதல் நேற்று மாலை 5 மணியளவில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. எனவே பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மீண்டும் விரைவில் தொடங்க உள்ளது.
இதன் காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்பிய வீரர்களை ஒரிரு நாட்களுக்குள் மீண்டும் ஒன்றிணைக்குமாறு அணி நிர்வாகங்களுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஸ்டார்க்கின் மேலாளர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இது டெல்லி அணிக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
ஐ.பி.எல். தொடர் நிறைவடைந்தவுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளதால் அதற்கு தயாராகும் பொருட்டு அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்த ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் ஐ.பி.எல். தொடருக்கு திரும்ப மாட்டார் என்று தகவல் வெளியான நிலையில் தற்போது ஸ்டார்க்கும் விலக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.