ஒருநாள் கிரிக்கெட்: அறிமுக போட்டியிலேயே உலக சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் முகமது அப்பாஸ்

இதற்கு முன்னர் இந்த சாதனை பட்டியலில் குருனால் பாண்ட்யா முதலிடத்தில் இருந்தார்.
image courtesy:twitter/@BLACKCAPS
image courtesy:twitter/@BLACKCAPS
Published on

நேப்பியர்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியில் முகமது அப்பாஸ் அறிமுக வீரராக களமிறங்கினார்.

இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, மார்க் சாப்மேனின் அதிரடி சதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாப்மேன் 132 ரன்களும் (111 பந்துகள்), டேரில் மிட்செல் 76 ரன்களும், அறிமுக வீரர் முகமது அப்பாஸ் 52 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் இர்பான் கான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதில் முகமது அப்பாஸ் இறுதி கட்டத்தில் களமிறங்கி பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். தலா 3 சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகள் விளாசிய அவர் வெறும் 24 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த அறிமுக வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் இந்தியாவின் குருனால் பாண்ட்யா 26 பந்துகளில் அரைசதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள முகமது அப்பாஸ் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

பின்னர் 345 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 44.1 ஓவர்களில் 271 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பாபர் அசாம் 78 ரன்களும், சல்மான் ஆகா 58 ரன்களும் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் நாதன் சுமித் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com