ஐபிஎல் மினி ஏலம்: குஜராத் அணியிலிருந்து 2 முக்கிய வீரர்களை வாங்கியது கொல்கத்தா அணி

ரசிகர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் குஜராத் அணி 2 முக்கிய வீரர்களை கொல்கத்தா அணிக்கு டிரேடிங் செய்துள்ளது.
Image Courtesy: BCCI/IPL 
Image Courtesy: BCCI/IPL 
Published on

மும்பை,

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளஐபிஎல் 16ஆவது சீசனுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது.

இந்த மினி ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை நவம்பர் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்தது. அதற்கான வேலைகளை அணி நிர்வாகங்கள் தீவிரமாக செய்து வருகின்றன.

கடந்த சீசனில் அறிமுகமான குஜராத் டைடன்ஸ் அணி தனது முதல் சீசனிலேயே தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு கோப்பையை தட்டித்தூக்கியது. கேப்டன் ஹார்திக் பாண்டியா அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தியிருந்தார்.

இதனால், அந்த அணி மினி ஏலத்திற்கு முன் நடைபெறும் அணிகளுக்குள்ளான வீரர்கள் டிரேடிங்கில் ஆர்வம் காட்டாது எனக் கருதப்பட்டது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் குஜராத் அணி லாக்கி பர்குசனையும், ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குர்பாஸையும் கொல்கத்தா அணிக்கு டிரேடிங் செய்துள்ளது. இந்த தகவலை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பெர்குசனை 10 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. இந்த ஆண்டு முகமது ஷமியுடன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவராக பெர்குசன் இருந்தார்.

குஜராத் அணிக்காக 13 போட்டிகளில் அவர் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதே நேரத்தில் பெர்குசன் 2019-21 முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியவர். இந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் கொல்கத்தா அணிக்கு திரும்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com