

சென்னை,
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.
கொழும்புவில் நேற்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியில் 18 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வி, பாகிஸ்தான் அணிக்கு டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியாக பதிவாகியுள்ளது.
இதற்கு முன், 2014ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 84 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. அதேபோல் 2009ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 48 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.