இனவெறி சர்ச்சை: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் மன்னிப்பு கோரினார்

இனவெறியுடன் தென் ஆப்பிரிக்க வீரரை விமர்சித்ததாக சர்ச்சை வெளியான நிலையில், தனது கருத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் மன்னிப்பு கோரியுள்ளார்.
இனவெறி சர்ச்சை: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் மன்னிப்பு கோரினார்
Published on

டர்பன்,

தென் ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தப்போட்டியின் போது தென் ஆப்பிரிக்க வீரர்கள் பெலக்வாயோ, வான்டெர் துஸ்சென் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பாகிஸ்தான் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ப்ராஸ் அகமது இனவெறியுடன் பேசியது ஸ்டம்ப்பில் இருந்த மைக்கில் பதிவாகி இருக்கிறது.

சர்ப்ராஸ் அகமது, ஆல்-ரவுண்டர் பெலக்வாயோவை நோக்கி ஏய் கருப்பு வீரரே. இன்று உங்கள் அம்மா எங்கு இருக்கிறார். உனக்காக அவர் இப்போது என்ன பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறார் என்று சீண்டினார். இந்த விவகாரம் தொடர்பாக சர்ப்ராஸ் அகமது மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து சர்ப்ராஸ் அகமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். விரக்தியில் நான் வெளிப்படுத்திய கருத்துக்களை தவறாக யாரும் எடுத்திருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு கிடையாது.

எனது வார்த்தைகள் எதிரணி வீரர்களுக்கோ அல்லது கிரிக்கெட் ரசிகர்களுக்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அவ்வாறு செயல்படவில்லை. கடந்த காலங்களிலும் சரி வரும் காலத்திலும் சரி எனது சக வீரர்களுடன் தோழமை உணர்வுடனும், மரியாதையுடனும் களத்திலும் களத்திற்கு வெளியேவும் இருப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com