

டப்ளின்,
அயர்லாந்து ஆண்கள் டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து பால் ஸ்டிர்லிங் விலகியுள்ளார். எனினும், அவர் ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர உள்ளதாகவும், அடுத்த உலகக்கோப்பையில் அயர்லாந்தை தகுதி பெறச் செய்வதே தனது இலக்கு என்றும் கூறி உள்ளார்.
2023-ம் ஆண்டு அண்டி பால்பிர்னி விலகியதைத் தொடர்ந்து, ஸ்டிர்லிங் முதலில் இடைக்கால கேப்டனாக நியமிக்கப்பட்டு பின்னர் நிரந்தர கேப்டனாக பொறுப்பேற்றார்.
அவரது தலைமையில், அயர்லாந்து அணி 48 டி20 போட்டிகளில் 20 வெற்றி, 26 தோல்வி மற்றும் 2 முடிவில்லா போட்டிகளை பதிவு செய்துள்ளது. மேலும், 2024 மற்றும் 2026 டி20 உலகக்கோப்பைகளில் அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது.
163 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள பால் ஸ்டிர்லிங், 3,895 ரன்களுடன் அயர்லாந்தின் அதிக ரன் எடுத்த வீரராக உள்ளார். விரைவில் புதிய கேப்டன் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்திய அணி ஜூன் மாதம் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 26ம் தேதி டி20 போட்டியும், 28ம் தேதி 2வது டி20 போட்டியும் நடைபெற உள்ளது.