

புது டெல்லி,
ஐபிஎல் 2026 தொடரில் இன்று (ஏப்ரல் 25) நடைபெற்ற 35-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய டெல்லி அணி பஞ்சாப் பந்துவீச்சை பஞ்சர் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் டெல்லி 264 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஸ் ஆர்யா அதிரடி தொடக்கம் கொடுத்தனர்.
பிரப்சிம்ரன் சிங் 18 பந்துகளில் அரைசதத்தை கடக்க அணியின் ஸ்கோர் 5.2 ஓவரிலேயே 100 ரன்களை கடந்தது. பவர்பிளே முடிவில் பஞ்சாப் அணி 116 ரன்கள் எடுத்தது. அப்போது மறுமுனையில் அதிரடி காட்டி வந்த பிரியான்ஸ் ஆர்யா 43 (17) ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங்கும் 76(26) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் கூப்பர் கனோலி - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதாமாக ஆடியநிலையில், கூப்பர் கனோலி 17(10) ரன்களில் அவுட்டானார். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த வதேரா 25(15) ரன்களில் அவுட்டானார்.
மறுமுனையில், அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாசினார். இறுதியில், 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி பஞ்சாப் வரலாறு படைத்துள்ளது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.