

மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் அஜிங்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
2025 மற்றும் 2026 ஆகிய இரண்டு ஐ.பி.எல். சீசன்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ரஹானே வழிநடத்தினார். அவரது தலைமையில் 2025-ம் ஆண்டு அணி 8-வது இடத்தையும், 2026-ம் ஆண்டு 7-வது இடத்தையும் பிடித்தது. தற்போது அவர் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டுள்ளதால், அடுத்த சீசனுக்காக புதிய கேப்டனை தேர்வு செய்யும் பணியில் கே.கே.ஆர். நிர்வாகம் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2011-ம் ஆண்டு மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் ரஹானே. கடைசியாக 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பிறகு தேசிய அணியில் இடம் கிடைக்காத நிலையில், உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்தார்.
அதேபோல், ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரஹானே, தற்போது ஓய்வு பெற்றுள்ளதால், அவரது இடத்தை நிரப்பும் புதிய கேப்டன் யார் என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.