

நெல்லை,
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - ஐதராபாத் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) நெல்லையில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 523 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் அக்ஷாத் ரெட்டி 248 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 565 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அக்ஷாத் ரெட்டி 250 ரன்களில் கேட்ச் ஆனார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி ஆட்ட நேர முடிவில் 79 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. அபினவ் முகுந்த் 101 ரன்களுடனும் (239 பந்து, 15 பவுண்டரி) கேப்டன் பாபா இந்திரஜித் 24 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்த போட்டி டிராவில் முடிவது உறுதி என்றாலும் இன்றைய கடைசி நாள் முழுவதும் தமிழக அணி பேட் செய்வது அவசியமாகும். அப்போது தான் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொள்ள முடியும். மாறாக தமிழக அணி ஆல்-அவுட் ஆனால், ஐதராபாத் அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்று 3 புள்ளிகளை கைப்பற்றி விடும்.
புதுச்சேரியில் நடந்து வரும் புதுச்சேரி அணிக்கு லீக் எதிரான ஆட்டத்தில் (பிளேட் பிரிவு) மேகலாயா அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. யோகேஷ் நாகர் 141 ரன்களுடன் (8 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். அடுத்து 63 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய புதுச்சேரி அணி நேற்றைய முடிவில் 4 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது.