ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்

இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி ஆட்ட நேர முடிவில் 15 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 32 ரன் எடுத்துள்ளது.
ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்
Published on

வல்சத்,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் இடம் பிடித்துள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

எலைட் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு- குஜராத் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் வல்சத்தில் நடக்கிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே குஜராத் 236 ரன்களும், தமிழ்நாடு 250 ரன்களும் எடுத்தன. 14 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய குஜராத் 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 38 ரன்களுடன் தடுமாறியது.

3-வது நாளான நேற்று சரிவில் இருந்து மீண்ட குஜராத் 312 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. மனன் ஹிங்ரஜியா (52 ரன்), உமங் குமார் (89 ரன்), ரிபல் பட்டேல் (81 ரன்) அரைசதம் அடித்தனர். தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

இதன் மூலம் குஜராத் அணி 299 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி ஆட்ட நேர முடிவில் 15 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 32 ரன் எடுத்துள்ளது. சாய் சுதர்சன் (18 ரன்), கேப்டன் சாய் கிஷோர் (4 ரன்) களத்தில் உள்ளனர். வெற்றிக்கு இன்னும் 267 ரன்கள் தேவை உள்ள நிலையில், கடைசி நாளான இன்று தமிழக அணி தொடர்ந்து விளையாட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com