

நொய்டா,
ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. அணிக்காக விளையாடி வரும் யாஷ் தயாள், சமூக வலைதள பிரபலமான ஸ்வேதா பண்டிரை கடந்த மாதம் 4-ம் தேதி (பிப்ரவரி) ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
சுமார் 5.8 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்ட இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சராக இருக்கும் ஷ்வேதா பண்டிர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் இணைந்து இருக்கும் வீடியோவை பகிர்ந்து இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் யாஷ் தயாள் இதுகுறித்து அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதற்கிடையில், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடும் யாஷ், கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற அணியில் முக்கிய பங்கு வகித்தவர். இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்க அவர் தயாராகி வருகிறார்.