

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கி பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் ரஹானே 81 ரன்கள் அடித்து இந்திய அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டெடுத்தார்.
இந்நிலையில், அஸ்வின் ஆடும் லெவனில் இடம்பெறாதது குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏனென்றால் அஸ்வின் கடந்த முறை வெஸ்ட் இண்டீஸில் நடந்த தொடரில், தொடர் நாயகன் விருது பெற்றவர். மேலும் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் கலக்கினார். அஸ்வின் சேர்க்கப்படாதது ஆச்சரியம் அளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.
எனவே இது தொடர்பாக, இந்திய அணி வீரர் ரஹானே கூறும் போது, ரோகித் சர்மா மற்றும் ஆர்.அஸ்வின் போன்ற வீரர்கள் ஆடும் லெவனில் இல்லாமல் இருப்பது கஷ்டமானது தான். ஆனால் அணி நிர்வாகம், அணிக்கு தேவையான வீரர்களை மட்டுமே கருத்தில்கொண்டு ஆடும் லெவனை தேர்வு செய்கிறது. அதனால் இந்த மைதனத்தின் தன்மைக்கு ஏற்ப ஜடேஜா சிறப்பாக பந்துவீசுவார் என்று நம்பியதால் அவரை தேர்வு செய்திருக்கிறார்கள். அதோடு 6-வது பேட்ஸ்மேன் ஒருவர் தேவைப்படுவதால், பேட்டிங் மற்றும் பந்துவீசும் விஹாரியை தேர்வு செய்திருக்கிறார்கள். பயிற்சியாளர் மற்றும் கேப்டனும் இணைந்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். என்று விளக்கம் அளித்துள்ளார்.