

மும்பை,
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதையடுத்து இலங்கை அணியுடன் 3 டி20 மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இந்த தொடர்களுக்கு ரோகித் சர்மா முழு நேர கேப்டனாக செயல்பட உள்ளார். இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவித்தவுடன் இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா செய்தியாளர்களிடம் கூறும்போது,
"நாங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் தேவைப்படும்போது ஓய்வு கொடுப்போம். அவர்களுக்கு சரியான ஓய்வு கொடுக்க விரும்புகிறோம்.
ரோகித் சர்மாவைப் பொறுத்த வரையில், அவர் நம் நாட்டின் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர். அவர் விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் விளையாடுகிறார். தற்போது வரை சிறந்த உடல் தகுதியுடன் இருக்கிறார்.
அவரை கேப்டனாக நியமித்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவருக்கு கீழ் வருங்கால கேப்டன்களை நாங்கள் உருவாக்குவோம். அனைத்தும் நல்லமுறையில் நடக்கும் என நாங்கள் நம்புகிறோம்". இவ்வாறு அவர் கூறினார்.