ரோகித் சர்மா ரசிகர் பேட்டால் அடித்து கொலை...கோலி ரசிகருக்கு ஆயுள் தண்டனை

இதுகுறித்து கீழப்பழூர் போலீசார் வழக்கு பதிந்து தர்மராஜை கைது செய்தனர்
ரோகித் சர்மா ரசிகரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொன்ற வழக்கில் விராட் கோலி ரசிகருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.
அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே க.பொய்யூர் வடக்குத்தெருவை சேர்ந்த புகழேந்தி மகன் விக்னேஷ் (25). கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா ரசிகர். அதே தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (24). விராட் கோலி ரசிகர் நெருங்கிய நண்பர்களான இருவருக்கும் இடையே ஐபிஎல் போட்டியில் தான் ஆதரவளிக்கும் அணி தான் பெரிய அணி என கூறி அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதில் விக்னேஷ், தர்மராஜை பார்த்து ‘உன்னை போல உன் அணியும் வீக்காக உள்ளது’ என்றும், விராட் கோலி குறித்தும் அவதூறாக பேசியுள்ளார்.
இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த தர்மராஜ், கடந்த 2022ம் ஆண்டு விக்னேஷை போனில் தொடர்பு கொண்டு மது அருந்தலாம் என்று கூறி பாருக்கு வரவழைத்துள்ளார். இருவரும் மது அருந்தினர். போதை ஏறியதும் தர்மராஜ், மறைத்து வைத்திருந்த கிரிக்கெட் பேட்டால் விக்னேஷின் தலையில் சரமாரி தாக்கினார். இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து கீழப்பழூர் போலீசார் வழக்கு பதிந்து தர்மராஜை கைது செய்தனர். இந்த வழக்கை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலாண்டினா விசாரித்து, விராட் கோலி ரசிகர் தர்மராஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.






