

மும்பை,
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, ரோகித் சர்மா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் நிச்சயம் விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நவ்தீப் சைனி கூறியதாவது,
200 சதவீதம், ரோகித் சர்மா ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவார். சமூக வலைதளங்களில் இதுபோன்ற செய்திகள் தொடர்ந்து பரவுகின்றன. மூன்று அல்லது நான்கு பக்கங்கள் ஏதாவது ஒன்றை பதிவிடுகின்றன. பின்னர் அதே செய்தி எல்லா இடங்களிலும் பிரபலமாகிவிடுகிறது.
ரோகித் எப்படிப்பட்ட வீரர், எப்படிப்பட்ட கேப்டனாக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் எத்தனை போட்டிகளை வெற்றிபெறச் செய்யும் சிறப்பான ஆட்டங்களை விளையாடியுள்ளார் என்பதும் தெரியும். எனவே, தற்போதைய நிலையில் அவரைவிட சிறந்தவர் யாரும் இல்லை என்று நான் நினைக்கிறேன். என்று கூறியுள்ளார்.
ரோகித் சர்மா 2027 உலகக் கோப்பையில் விளையாடுவாரா? என்ற விவாதம் தொடர்ந்து வரும் நிலையில், சைனியின் இந்த கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது.