ரோகித் சர்மா ஓய்வு: என்னுடைய கேள்வி இதுதான்..? இங்கிலாந்து முன்னாள் வீரர்

image courtesy:PTI
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் ஓய்வை அறிவித்துள்ளார்.
லண்டன்,
விராட் கோலிக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது.
2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் ஓய்வு பெற்றார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி அறிவித்தார்.
எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரை ரோகித் கேப்டனாக இருப்பார் என்று அனைவரும் நினைத்த வேளையில் அவர் ஓய்வை அறிவித்தது பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதில் தமக்கு ஆச்சரியம் இல்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் ஆதர்டன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அது (ஓய்வு) அவருடைய சொந்த முடிவா? அல்லது யாராவது அந்த முடிவை எடுக்க சொன்னார்களா? என்பது கேள்வியாகும். ஏனெனில் ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கு முந்தைய நாளில் அவரை இந்திய தேர்வாளர்கள் தேர்வு செய்யப் போவதில்லை என்று முடிவெடுத்ததாக செய்திகள் வந்தன.
ஆனால் ரோகித் சர்மா எடுத்துள்ள முடிவு ஆச்சரியமானது கிடையாது. ஏனெனில் பேட்டிங்கில் ரன்கள் குவிக்காத கேப்டன் தலைமையில் ஒரு அணி தோல்வியை சந்திப்பது மோசமான விஷயமாகும். ரோகித்தின் தலைமையில் கடந்த 6 போட்டிகளில் இந்தியா 5 போட்டிகளில் தோல்வியடைந்தது. அவருடைய பேட்டிங் பார்ம் முற்றிலும் குறைந்து போய் விட்டது. அது எந்த ஒரு கேப்டனுக்கும் மோசமான சேர்க்கையாக இருக்கும்.
தற்போது அவருக்கு 38 வயதாகி விட்டது. மறுபுறம் இந்திய கிரிக்கெட் நிறைய ஆழமான திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது. அது போன்ற சூழ்நிலையில் பார்ம் மற்றும் வெற்றிகள் உங்கள் பக்கம் வரும் வரை உங்களால் காத்திருக்க முடியாது. அதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட இந்த ஓய்வு முடிவு ஆச்சரியமானது கிடையாது. ஆனால் உங்களுடைய டெஸ்ட் கெரியர் முடியும்போது சோகமாக இருக்கும்" என்று கூறினார்.