ரோகித் தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து இந்த கேள்வியை கேட்க வேண்டும் - ஸ்டீவ் வாக்

Image Courtesy: @ICC
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் தலைமையில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி ரோகித் சர்மா தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது. ரோகித் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாததே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் அடிக்க தடுமாறி வரும் ரோகித் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்க தொடங்கினர். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் தலைமையில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
வரும் ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த தொடரில் இந்திய கேப்டனாக ரோகித் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 2025 இங்கிலாந்து தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படத் தகுதியானவரா? என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஸ்டீவ் வாக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்து ஸ்டீவ் வாக் கூறியதாவது, இது முற்றிலும் ரோகித் சர்மாவை பொறுத்தது. இதை அவரால் மட்டுமே தீர்க்க முடியும். அவர் தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து இப்போதும் நான் கேப்டனாக செயல்பட வேண்டுமா?, இந்தியாவுக்காக விளையாட வேண்டுமா? அதற்காக நான் உறுதியாக இருக்கிறேனா? என்பது போன்ற கேள்விகளை கேட்க வேண்டும்.
கேப்டனாக செயல்பட தன்னால் போதுமான நேரம் மற்றும் முயற்சிகளைப் போட முடியுமா? என்றும் அவர் பார்க்க வேண்டும். ஏனெனில், உங்களுடைய நாட்டுக்காக விளையாடுவது மிகப்பெரிய கவுரவம். அதில் நீங்கள் மனநிறைவு அல்லது ரிலாக்ஸாக இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.