

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர்களான பென் டக்கெட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். இதில் பெத்தேல் 91 ரன்களிலும்
பென் டக்கெட் 141 ரன்கள் குவித்தும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோ ரூட் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 387 ரன்களை குவித்தது.
388 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 179 ரன்கள் சேர்த்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். சுப்மன் கில் 77 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தினார். 138 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 14 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் ரன் ஏதும் அடிக்காமலும் அவுட்டாகினர். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 74 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த கே.எல்.ராகுல் 12 ரன்களிலும், அக்சர் படேல் 2 ரன்களிலும் அவுட்டாகினர்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 360 ரன்கள் மட்டுமே இந்தியா எடுத்தது. இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. டி20 தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரையும் இழந்திருப்பது இந்தியா ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.