"ரோகித் சொன்னதை ஆரம்பத்துல நம்பல" - டி20 உலகக்கோப்பை அனுபவத்தை பகிர்ந்த சஞ்சு சாம்சன்

ரோகித் சர்மா தன்னை நேரில் சந்தித்து நம்பிக்கை அளித்ததாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
 சஞ்சு சாம்சன்
Published on

புதுடெல்லி,

2026 டி20 உலகக்கோப்பை தொடரின் ஆரம்ப போட்டிகளில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காதபோது, முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தனக்கு கூறிய ஆறுதல் வார்த்தைகளை ஆரம்பத்தில் நம்பவில்லை என்று சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

விளையாடவில்லை

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சஞ்சு சாம்சன் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. இதனால், உலகக் கோப்பையின் தொடக்க போட்டிகளில் அவருக்கு பதிலாக அபிஷேக் சர்மாவுடன் இணைந்து இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார்.

மனம் தளராதே

இந்த கடினமான சூழலில் ரோகித் சர்மா தன்னை நேரில் சந்தித்து நம்பிக்கை அளித்ததாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, 'மனம் தளராதே. இது நீண்ட தொடர். உனக்கான வாய்ப்பு நிச்சயம் வரும். அது எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என்று ரோகித் சர்மா என்னிடம் கூறினார். ஆனால், அந்த நேரத்தில் அவரது வார்த்தைகளை நான் முழுமையாக நம்பவில்லை" என்றார்.

கேள்வி கேட்க ஆரம்பித்தேன்

தொடர்ந்து பேசிய சஞ்சு சாம்சன், "பின்னர் நான் ஏன் கிரிக்கெட் விளையாடுகிறேன்? எனது நோக்கம் என்ன? என்று என்னையே நான் கேள்வி கேட்க ஆரம்பித்தேன். பின்னர் உலகக் கோப்பை நடைபெற்று கொண்டிருந்தபோதே என்னை நான் புதிதாக கண்டறிந்தேன். அதன் பிறகு எல்லாமே இயல்பு நிலைக்கு திரும்பியது" என்று கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com