ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2-வது வீரர்... புதிய மைல்கல்லை எட்டிய சுப்மன் கில்

கில்லுக்கு அடுத்தபடியாக தவான், கோலி உள்ளனர்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2-வது வீரர்... புதிய மைல்கல்லை எட்டிய சுப்மன் கில்
Published on

தரம்சாலா,

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இமாசலப் பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா வெற்றி

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 24.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து 195 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 37 பந்துகளில் தனது 18-வது ஒருநாள் அரைசதத்தை எட்டினார். இதன் மூலம் இந்திய அணி 22.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஒருநாள் கிரிக்கெட்டில் கில்லுக்கு புதிய மைல்கல்

இந்த போட்டியில் சுப்மன் கில் 47 ரன்களை கடந்தபோது, ஒருநாள் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை அதிவேகமாக கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த மைல்கல்லை அவர் வெறும் 62 இன்னிங்ஸ்களில் எட்டினார். இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் அம்லா 57 இன்னிங்ஸ்களில் 3,000 ரன்களை எட்டியதன் மூலம் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்களில் கில்லுக்கு அடுத்தபடியாக தவான், கோலி உள்ளனர்.

தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி லக்னோவில் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com