ஷனகா அவுட் குழப்பம்: கிரிக்கெட் விதி சொல்வது என்ன..?

ஆசிய கோப்பையில் இந்தியா-இலங்கை ஆட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த சூப்பர்4 சுற்றின் 6-வது மற்றும் கடைசி லீக்கில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61 ரன்களும், திலக் வர்மா 49 ரன்களும் அடித்தனர்.
பின்னர் 203 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியும் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் அடித்தது. இதனால் ஆட்டம் சமன் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 107 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 5 பந்தில் 2 விக்கெட்டையும் இழந்து 2 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய இந்தியா முதல் பந்திலேயே 3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் வீசிய சூப்பர் ஓவரின் 4-வது பந்தை இலங்கை வீரர் தசுன் ஷனகா எதிர்கொண்டார். அந்த பந்து ஷனகாவின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பிடித்ததாக நினைத்த அர்ஷ்தீப் சிங் அவுட் கேட்டார். அதற்கு களத்தில் இருந்த நடுவரும் விக்கெட் வழங்கினார். இதற்கிடையே சிங்கிள் எடுக்க ஓடிய ஷனாக்காவை சாம்சன் ரன் அவுட்டாக்கினார்.
அதேவேளை ஷனகா நடுவர் வழங்கிய கேட்ச் அவுட்டுக்கு ரிவியூ எடுத்தார். ரிவியூவில் பந்து அவருடைய பேட்டில் படவில்லை என்பது தெளிவாக தெரிந்ததால் 3வது நடுவர் நாட் அவுட் வழங்கினார். இருப்பினும் இந்திய வீரர்கள் எதிராக ரன் அவுட் வழங்குமாறு கேட்டனர். ஆனால் நடுவர் ரன் அவுட் வழங்காததால் இந்திய வீரர்களும் ரசிகர்களும் குழம்பினார்கள்.
கிரிக்கெட் விதி 20.1.1.3-ன் படி, வைடு, நோ-பால் போன்ற பந்துகளில் ரன் அவுட்டானால் கூட பேட்ஸ்மேன் அவுட்டாகி வெளியே செல்ல வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெறும் சூழ்நிலைகளில் நடுவர் வழங்கும் முதல் தீர்ப்பே இறுதியானதாகும். அதன் அடிப்படையில் நடுவர் முதலில் ஷனகா கேட்ச் முறையில் அவுட் என்று தீர்ப்பு வழங்கியதால் விதிமுறைப்படி அப்பந்து டெட் பாலாகிவிட்டது. அதனாலேயே ரன் அவுட் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் ரன் அவுட்டிலிருந்து தப்பிய ஷனகா தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை பெற்றார். இருப்பினும் அவர் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






