

துபாய்,
இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.
10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
நேற்று நடந்த முதல் அரையிறுதியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியை இந்தியா, வரும் 13-ந்தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும்.
இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை நியூசிலாந்தின் சூசி பேட்ஸ் 4,758 ரன்களுடன் தன்வசம் வைத்துள்ளார்.
தற்போது 4,692 ரன்களுடன் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்மிருதி மந்தனா, இந்த சாதனையை முறியடிக்க இன்னும் 67 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும்.
இறுதிப்போட்டியில் 67 ரன்கள் எடுத்தால், சூசி பேட்ஸை பின்னுக்குத் தள்ளி சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற புதிய உலக சாதனையை மந்தனா படைப்பார்.
1. சூசி பேட்ஸ் (நியூசிலாந்து) - 186 போட்டிகள் - 4,758 ரன்கள்
2. ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 175 போட்டிகள் - 4,692 ரன்கள்
3. ஹர்மன்ப்ரீத் கவுர் (இந்தியா) - 185 போட்டிகள் - 4,273 ரன்கள்
4. சமாரி அதபத்து (இலங்கை) - 168 போட்டிகள் - 4,095 ரன்கள்
5. சோபி டிவைன் (நியூசிலாந்து) - 158 போட்டிகள் - 3,817 ரன்கள்