துலீப் டிராபி தொடரில் சூர்யகுமார் யாதவ் ஆடுவது சந்தேகம் - காரணம் என்ன...?

துலீப் டிராபி தொடருக்கான இந்திய ‘சி’ அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பிடித்திருந்தார்.
image courtesy: PTI 
image courtesy: PTI 
Published on

புதுடெல்லி,

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் (வயது 33). இவர் இந்திய அணிக்காக 1 டெஸ்ட், 37 ஒருநாள் மற்றும் 71 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இந்திய அணிக்காக அதிக அளவில் டி20 போட்டிகளில் ஆடும் சூர்யகுமார் யாதவ், இலங்கைக்கு எதிரான கடந்த தொடரின் போது இந்திய டி20 அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார்.

இந்திய அணி இந்த ஆண்டில் வங்காளதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இதையடுத்து, மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என சூர்யகுமார் யாதவ் கடுமையாக உழைத்து வந்தார். ஆனால், இந்திய அணி வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடினால்தான் தேசிய அணியில் இடம் பிடிக்க முடியும் என பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது.

இதனால் புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். விரைவில் துலீப் டிராபி தொடரும் நடக்க உள்ளது. துலீப் டிராபி தொடருக்கான இந்திய 'சி' அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பிடித்திருந்தார்.

இந்த நிலையில் புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் தமிழக கிரிக்கெட் சங்க லெவன் அணிக்கு எதிராக விளையாடியபோது, சூர்யகுமாருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் துலீப் டிராபி தொடரில் ஆடுவதில் சந்தேகம் நிலவுகிறது.

ஒருவேளை சூர்யகுமார் யாதவ் துலீப் டிராபி தொடரில் ஆடவில்லை என்றால் வங்காளதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியில் அவர் இடம் பெறுவது கேள்விக்குறியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com