

10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரில் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியம் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை (‘ஏ’ பிரிவு) எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட்டிங் தொடங்கிய இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இதில் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு திலக் வர்மா களமிறங்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினார். பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர் அரைசதம் கடந்தார். 40 பந்துகளில் 77 ரன்கள் எடுத்த இஷான் கிஷன், சைம் ஆயுப் பந்தில் போல்டாகினார்.
திலக் வர்மா 25 ரன்களிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் ஷிவம் துபே ஓரளவு அதிரடி காட்டினார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு பாகிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டது.
சவாலான இலக்குடன் பேட்டிங் தொடங்கிய பாகிஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஷாஹிப்சாதா பர்ஹான் ரன் எதுவும் எடுக்காமல் ஹர்திக் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஓவரில் சைம் ஆயுப் 6 ரன்களில் ஜஸ்பிரித் பும்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 5 ரன்களில் அக்சர் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் அகாவும் 4 ரன்களில் பும்ரா பந்தில் அவுட் ஆனார்.
முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் பாகிஸ்தான் அணியால் அதில் இருந்து மீள முடியவில்லை. ஆட்டத்தின் முதல் ஓவரிலிருந்தே இந்தியாவின் கை ஓங்கியிருந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 114 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹாட்ரிக் வெற்றியை ருசித்ததோடு, சூப்பர் 8 சுற்றுக்கும் இந்திய அணி தகுதி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஹரிதிக் பாண்ட்யா, பும்ரா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.