டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த சைப் ஹசன்

ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர்4 சுற்று ஆட்டத்தில் சைப் ஹசன் 5 சிக்சர்கள் விளாசினார்.
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இதில் நேற்று நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் மோதின. இதில் டாஸ் ஜெயித்த வங்காளதேச பொறுப்பு கேப்டன் ஜேக்கர் அலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 75 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரிசாத் ஹூசைன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்து 169 ரன் இலக்கை நோக்கி வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் சைப் ஹசன் நிலைத்து நின்று ஆட இன்னொரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. அக்ஷர் படேலின் சுழலில் சிக்சர்களை தெறிக்கவிட்டு மிரட்டிய சைப் ஹசன் தொடர்ந்து 2-வது அரைசதத்தை அடித்தார். ஆனாலும் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு அவருக்கு கிடைக்கவில்லை. அணியை கரைசேர்க்க போராடிய சைப் ஹசன் 69 ரன்னில் (51 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) பும்ராவின் வேகத்தில் வீழ்ந்தார். வங்காளதேச அணி 19.3 ஓவர்களில் 127 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
இந்த ஆட்டத்தில் சைப் ஹசன் 5 சிக்சர்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக சிக்சர் விளாசிய வங்காளதேச வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.






