டி20 உலகக்கோப்பை; இந்திய அணியில் துபே இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை - இந்திய முன்னாள் வீரர்

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் சீசன் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

புதுடெல்லி,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் சீசன் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் ஜூன் 1ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க அனைத்து வீரர்களும் ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல் தொடர் மட்டுமின்றி கடந்த இரண்டு சீசன்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷிவம் துபேவை டி20 உலகக்கோப்பைக்கான அணியில் சேர்க்க வேண்டும் என பல இந்திய முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் துபே இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை என இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, உலகக் கோப்பையில் அவரை தேர்ந்தெடுக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நீங்கள் அவரை எதை வைத்து கழற்றி விடுவீர்கள்?. அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பாருங்கள். நிறைய பேர் அவருக்கு சுதந்திரம் கொடுக்கப்படுவது பற்றி பேசுகிறார்கள். ஆனால் அதே சுதந்திரத்தை பெறும் வீரர்கள் துபேவை போல் சிகசர் அடிப்பதை காட்ட முடியுமா?. ஆண்ட்ரே ரசல் உட்பட அப்போட்டியில் விளையாடிய அனைவரும் தடுமாறினார்கள்.

அதை பார்க்கும் போது மைதானம் பெரியதாகவும், பிட்ச் சிக்ஸர்களை அடிப்பதற்கு கடினமானதாகவும் இருப்பது போல் தெரிந்தது. ஷிவம் துபேவுக்கு அப்படி தெரியவில்லை. சரியான பந்துகளை தேர்ந்தெடுத்து அதை ரசிகர்கள் கூட்டத்தில் விழும் அளவுக்கு அடிக்கும் அவர் வேகப்பந்து வீச்சாளர்களையும் அதிரடியாக எதிர்கொள்கிறார். அவர் தன்னை தேர்வாளர்கள் உலகக் கோப்பைக்கு அழைத்துச் செல்ல கட்டாயப்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com