இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: சவாலுக்கு தயாராக இருப்போம் - பயிற்சியாளர் கம்பீர்

ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் சிறப்பாக செயல்படும் இந்திய அணி அண்மை காலமாக டெஸ்ட் தொடரில் சொதப்பி வருகிறது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: சவாலுக்கு தயாராக இருப்போம் - பயிற்சியாளர் கம்பீர்
Published on

15-ந்தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சவாலை சமாளிக்க தயாராக இருப்போம் என வீரர்களுக்கு இந்திய பயிற்சியாளர் கம்பீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா- இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் வருகிற 15-ந்தேதி காலேயிலும், 2-வது டெஸ்ட் 23-ந்தேதி கொழும்பிலும் தொடங்குகிறது.

ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் சிறப்பாக செயல்படும் இந்திய அணி அண்மை காலமாக டெஸ்ட் தொடரில் சொதப்பி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உள்நாட்டில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அதற்கு முன்பாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் 0-3 என்ற கணக்கில் மோமாக தோற்றது. இதனால் டெஸ்ட் அணிக்கு கம்பீருக்கு பதிலாக வேறு பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனாலும் அவர் தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக நீடிக்கிறார். இலங்கை டெஸ்ட் தொடரில் சாதிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப் பட்டுள்ளார். தற்போது அணியில் உள்ள வீரர்களில் லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் மட்டுமே இலங்கை மண்ணில் இதற்கு முன்பு டெஸ்டில் ஆடிய அனுபவம் கொண்டவர்கள். மற்ற அனைவரும் புதியவர்கள்.

கம்பீர் பேச்சு

பயிற்சிக்கு முன்பாக அணி வீரர்களிடம் கம்பீர் உரையாடினார். அந்த உரையாடலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் கம்பீர் பேசுகையில் “நம் முன் எத்தகைய சவால் காத்திருக்கிறது. எதற்காக நாம் விளையாடுகிறோம் என்பது நமக்கு தெரியும். வெற்றி பெறுவதற்கு, நமது சக்திக்குட்பட்ட எல்லா விஷயங்களையும் முடிந்த அளவுக்கு மிகச்சிறப்பாக செய்ய வேண்டும்.

ஆகஸ்டு 15-ந்தேதி நாம் முதலில் பேட்டிங் செய்தாலும் சரி, முதலில் பந்து வீசினாலும் சரி, நம் முன் வைக்கப்படும் எந்தவொரு சவாலை எதிர்கொள்ளவும். அதற்கான சரியான பதில்களை அளிக்கவும் நாம் முழுமையாக தயாராக இருப்போம். எனவே இப்போதில் இருந்தே வெற்றிக்கான அனைத்து அம்சங்களையும் கச்சிதமாக செயல்படுத்துவதை உறுதி செய்யுங்கள்.

அணியில் சில புதிய வீரர்கள் இணைந்துள்ளனர். முதலாவதாக சுழற்பந்து வீச்சாளர் சரன்ஷ் ஜெயினுக்கு வாழ்த்துகள். இந்த இடத்தை பிடிக்க நீங்கள் கடினமாக உழைத்துள்ளீர்கள். களம் காண வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உங்கள் குடும்பத்தினரும், நாடும் பெருமைப்படும் வகையில் அசத்துங்கள். இரண்டாவதாக, புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளூர் கிரிக்கெட்டில் கடந்த சீசனில் பிரமாதமாக பந்து வீசினீர்கள். ஜம்மு-காஷ்மீர் அணி முதல்முறையாக ரஞ்சிய கோப்பையை வெல்வதற்கு உதவிகரமாக இருந்தீர்கள். இது ஒரு சிறந்த சாதனை. அவருக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்” என்றார்.

பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்

டெஸ்ட் கிரிக்கெட் தொட ருக்கு முன்பாக இந்திய அணி 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது. இதன்படி இந்தியா-இலங்கை லெவன் அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் கொழும்பில் உள்ள என்.சி.சி. மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

இலங்கை ஆடுகளங்களில் சுழலுக்கு உகந்த தங்களை பழக்கப்படுத்திக் கொள்வதற்கு இந்த பயிற்சி ஆட்டத்தை கேப் டன் சுப்மன் கில், லோகேஷ் ராகுல். ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், தேவ்தத் படிக்கல் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள். இதே போல் ஆடுகள சூழலை அறிந்து. அதற்கு ஏற்ப ஆயத்தமாவதற்கு முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஜடேஜா குல்தீப் யாதவ். மானவ் சுதார் உள்ளிட்ட பவுலர்களும் ஆர்வமாக உள்ளனர். இலங்கை லெவன் அணி சோனல் தினுஷா தலைமையில் களம் இறங்குகிறது. ரமேஷ் மென்டிஸ், லஹிருகுமாரா, விஷ்வா பெர்னாண்டோ, பவன்ரத்னா யகே போன்ற சர்வதேச போட்டியில் ஆடிய வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com