

புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜின்கியா ரஹானே, தனது சிறுவயதில் தந்தை செய்த தியாகம் மற்றும் அது தனது கிரிக்கெட் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பது குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மும்பையில் 7 வயதில் கிரிக்கெட் பயிற்சிக்கு செல்லத் தொடங்கிய அஜின்கியா ரஹானே, இந்திய அணிக்காக விளையாடும் நிலை வரை உயர்ந்த தனது பயணத்தை நினைவுகூர்ந்தார்.
ஒரு பேட்டியில் பேசிய அவர், முதல் நாளில் தனது தந்தை தன்னை பயிற்சிக்கு அழைத்து சென்றதாக கூறினார். அதற்காக அவரது தந்தை அலுவலகத்தில் விடுப்பு எடுக்க வேண்டியிருந்ததுடன், அந்த நாளுக்கான சம்பளத்தையும் இழந்ததாக தெரிவித்தார்.
முதல் நாளுக்குப் பிறகு, "இனிமேல் நீயே தனியாக ரெயிலில் செல்ல வேண்டும்" என்று தந்தை கூறியதாக ரஹானே நினைவுகூர்ந்தார்.
வெறும் 7 வயதில், கிரிக்கெட் கிட் பையை சுமந்தபடி அதிகாலை நேரத்தில் மும்பையின் கூட்ட நெரிசலான புறநகர் ரெயிலில் தனியாக பயணம் செய்ததாக அவர் தெரிவித்தார். அந்த அனுபவம் பின்னர் தனது வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதியாக மாறியதாகவும் கூறினார்.
தான் உண்மையில் தனியாக பயணம் செய்யவில்லை என்பதை ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு பிறகே அறிந்ததாக ரஹானே கூறினார்.
தான் தனியாக சென்ற இரண்டாவது நாளில், தனது தந்தை வேறு ஒரு பெட்டியில் ஏறி, தனக்கு தெரியாமல் பின்தொடர்ந்து வந்ததாக கூறினார். இது தனக்குள் மிகப்பெரிய உணர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அந்த தருணம் தனது வாழ்க்கையே மாற்றியதாகவும் ரஹானே தெரிவித்தார்.
தந்தையின் இந்த அன்பும் தியாகமும் தெரிந்த பிறகு, தனது வாழ்க்கையில் முக்கியமான ஒரு முடிவை எடுத்ததாக ரஹானே கூறினார்.
"மாநில அணிக்காக விளையாடினாலும் சரி, இந்திய அணிக்காக விளையாடினாலும் சரி, நான் செய்வது அனைத்தையும் என் பெற்றோருக்காகவே செய்ய வேண்டும் என்று அன்றே முடிவு செய்தேன். அந்த ஊக்கமும் உத்வேகமும்தான் எனது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் என்னை முன்னோக்கி நகர்த்தியது," என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சிறுவயதில் தந்தை செய்த சிறிய தியாகமும், மகனின் மீது வைத்திருந்த அக்கறையும் அஜின்கியா ரஹானேவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.