ஆஸி.அணியினர் அந்த வார்த்தையை பயன்படுத்தி எங்களை ஸ்லெட்ஜிங் செய்தனர் - பவுமா

3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றியது.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

லண்டன்,

ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 138 ரன்களும் எடுத்தன. பின்னர் 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 65 ஓவர்களில் 207 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து 282 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 83.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 136 ரன்களும், கேப்டன் பவுமா 66 ரன்களும் அடித்தனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், கம்மின்ஸ், ஹேசில்வுட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஐ.சி.சி. உலகக்கோப்பை போட்டியில் முதல்முறையாக வாகை சூடி மோசமான வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்கள்.

முன்னதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு 'சோக்கர்ஸ்' என்ற மோசமான பட்டப்பெயர் நீண்ட காலமாக உண்டு. ஐ.சி.சி. நடத்தும் முக்கியமான தொடர்களில் லீக் சுற்றுகளில் அசத்தும் அவர்கள் 'நாக்-அவுட்' போட்டிகளில் அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் தோல்வியடைந்து விடுவர். அதனால் தென் ஆப்பிரிக்க அணி மீது 'சோக்கர்ஸ்' என்ற முத்திரை குத்தப்பட்டது. அந்த முத்திரைய இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி கிழித்தெறிந்துள்ளது.

இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியினர் தங்களை சோக்கர்ஸ் என்று ஸ்லெட்ஜிங் செய்ததாக தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்த போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தின்போது அவர்கள் 'சோக்கர்ஸ்' என்று ஸ்லெட்ஜிங் செய்தனர். ஆஸ்திரேலிய வீரர்களில் ஒருவர் நாங்கள் 60 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தோற்று விடுவோம் என்பதை குறிக்க அந்த வார்த்தையை பயன்படுத்தியது காதில் வந்து விழுந்தது.

ஆனால் மார்க்ரம் ஒவ்வொரு ஓவருக்கும் என்னிடம் வந்து, இந்த முறை நிச்சயம் அவர்களுக்கு வாய்ப்பை வழங்கி விடக்கூடாது என உறுதிப்பட கூறினார். அவர்கள் நிறைய பேசவில்லை. ஆனால் ஒரு சில வார்த்தைகள் காதில் விழுந்தன. நீண்ட காலத்திற்கு பிறகு இறுதி தடையை வெற்றிகரமாக கடந்து வரலாற்றில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com