பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர் - சென்னைக்கு எதிரான வெற்றிக்கு பின் ரிஷப் பண்ட் பேட்டி

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றது.
Image Courtesy: Twitter
Image Courtesy: Twitter
Published on

விசாகப்பட்டினம்,

ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் வார்னர் 52 ரன், பண்ட் 51 ரன் எடுத்தனர். இதையடுத்து 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 171 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது, எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். கடந்த போட்டிகளில் செய்த தவறுகளில் இருந்து வெளிவந்து ஒரு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளோம்.

கடந்த 2 வாரங்களாகவே ப்ரித்வி ஷா பேட்டிங்கில் தனது பயிற்சிகளை முறையாக மேற்கொண்டு வந்தார். இதுதான் அவருக்கான நேரம் என்று இந்த போட்டியில் அவருக்கு வாய்ப்பளித்தோம். அவரும் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்தி கொண்டார். அதேபோன்று முகேஷ் குமாரும் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

ஒரு கிரிக்கெட்டராக நான் என்னுடைய 100 சதவீத பங்களிப்பை எப்போதும் வழங்க நினைக்கிறன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் பெரியளவில் போட்டிகளில் விளையாடவில்லை. இருந்தாலும் தற்போது மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com