2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட ரோகித், கோலிக்கு இது அவசியம் - ஹர்பஜன்

அடுத்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு இன்னும் 2.5 வருடங்கள் உள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

மும்பை,

2024-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றதும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றனர். சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற கையோடு ரோகித் சர்மா, விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து விடைபெறக்கூடும் என்று செய்திகள் வெளியாகின.

ஆனால் தாங்கள் தற்போது ஓய்வு பெறப்போவதில்லை என்றும் ஓய்வு வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேப்டன் ரோகித் சர்மா ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்தார். மேலும் அடுத்த ஒருநாள் (2027-ம் ஆண்டு) உலகக்கோப்பையில் விளையாட முயற்சிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா நல்ல பிட்னஸ் கடைபிடிப்பதுடன் வெற்றிக்கான பசியுடன் இருப்பது அவசியம் என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- " ரோகித் சர்மா இன்னும் சாதிக்க ஏதாவது இருக்குமேயானால் அது 50 ஓவர் உலகக்கோப்பை என்று நான் கருதுகிறேன். அதை ரோகித் சர்மா வெல்ல விரும்புவார். ஆனால் அதற்கு இன்னும் 2.5 வருடங்கள் இருக்கிறது. அது பெரிய தொலைவு. அதுவரை நம்முடைய பிட்னஸ் எங்கே இருக்கிறது? நம்முடைய வெற்றிக்கான பசி எங்கே இருக்கிறது? என்பதை ரோகித் சர்மா பார்க்க வேண்டும். ஒருவேளை அப்போதும் அந்த இரண்டையும் கொண்டிருந்தால் ரோகித் சர்மா தாராளமாக விளையாடலாம். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். விராட் கோலிக்கும் இதே நிலைமைதான் பொருந்தும்" என்று கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com