image courtesy: AFP
image courtesy: AFP

டி20 கிரிக்கெட்டில் மலிங்கா, பும்ரா போன்ற பவுலர்கள் அசத்த காரணம் இதுதான் - பிராவோ

டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் பந்துவீசுவதில் சிரமத்தை எதிர்கொள்வது குறித்து பிராவோ பேசியுள்ளார்.
Published on

சென்னை,

அதிரடியான பேட்டிங், எதிர்பாராத திருப்பம், கடைசி நேர திரில்லர் என ஏகப்பட்ட சுவாரஸ்யத்தை டி20 போட்டிகள் வழங்கி வருவதால் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் அது வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நீண்ட நேரம் நடப்பதனால் அதனை நேரில் காண்பதற்கோ அல்லது தொலைக்காட்சி வாயிலாக காண்பதற்கோ ரசிகர்கள் பெரியளவில் ஆர்வம் காட்டுவதில்லை.

ஆனால் டி20 போட்டிகள் 3 முதல் 4 மணி நேரம் வரை மட்டுமே நடைபெறும் என்பதனால் அந்த போட்டியை காண ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம்தான் அதிகம் இருந்து வருகிறது. பந்துவீச்சாளர்கள் பலரும் பெரிய அளவில் ரன்களை வாரி கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஐ.பி.எல். போட்டிகளில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதால் பேட்ஸ்மேன்கள் அழுத்தம் இல்லாமல் அதிரடியாக ரன்களை குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் பந்துவீசுவதில் சிரமத்தை எதிர்கொள்வது குறித்து பேசியுள்ள சி.எஸ்.கே. அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ கூறுகையில் : டி20 பவுலர்கள் சிரமப்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்கள் தங்களால் யார்க்கர் வீச முடியும் என்று தெரிந்தும் அவர்களது திறமையை நம்புவது கிடையாது அதனால்தான் அதிகப்படியான அழுத்தத்தில் செல்கின்றனர்.

சி.எஸ்.கே. அணியில் இருக்கும் அனைத்து பந்துவீச்சாளர்களும் யார்க்கர் பந்து வீசுவதை உறுதி செய்யும் விதமாக பயிற்சியின்போது நாங்கள் 12 முதல் 15 யார்க்கர் பந்துகளை வீச வைத்து பயிற்சி அளித்து வருகிறோம். டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செயல்பட்ட மலிங்கா மற்றும் தற்போதுவரை அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் பும்ரா போன்ற பவுலர்களின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணமே அவர்களது யார்க்கர் பந்துகள்தான். அவர்களிடம் இயல்பாகவே சிறப்பாக யார்க்கர் வீசும் திறன் அதிகம் காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com