டிஎன்பிஎல்: மழையால் போட்டி நிறுத்தம் - டக்வொர்த் லூயிஸ் முறைப்படி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி..!

திருச்சி அணி, 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது.
image courtesy: TNPL twitter
image courtesy: TNPL twitter
Published on

சேலம்,

6-வது டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பை இழந்ததால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க வீரராக களமிறங்கிய அக்ஷய் ஸ்ரீனிவாசன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் திருச்சி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர்.

கேப்டன் முருகன் அஸ்வின் 13 ரன்களில் அதீக் உர் ரஹ்மான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் கோபிநாத் 24 ரன்கள் எடுத்தார். இறுதியில் 19.5 ஓவர்களில் சேலம் அணி 87 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. திருச்சி அணி தரப்பில் ரஹீல் ஷா, அதீக் உர் ரஹ்மான் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து 88 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி, 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை விட்டபோதும் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் தொடர்ந்து போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, ஆட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com