டி.என்.பி.எல் : சேலம் அணிக்கு 136 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திருப்பூர் அணி

திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.
Image Tweeted By @TeamTiruppur 
Image Tweeted By @TeamTiruppur 
Published on

கோவை,

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது.

அடுத்த கட்ட போட்டிகள் தற்போது கோவையில் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் திருப்பூர் - சேலம் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்ரீகாந்த் மற்றும் அரவிந்த் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் ஸ்ரீகாந்த் 32 ரன்களிலும் அரவிந்த் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் களமிறங்கிய சுப்ரமணியன் ஆனந்த் 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பின்னர் மான் பாஃப்னா களமிறங்கினார்.

சிறந்த பாட்னர்ஷிப்பை அமைக்க தவறிய திருப்பூர் அணி தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. பெரியசாமி பந்துவீச்சில் கார்திகேயனிடம் கேட்ச் கொடுத்து ராஜ்குமார் (11) ஆட்டமிழந்தார். மான் பாஃப்னா 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இறுதியில் திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.

டேரில் ஃபெராரியோ 2 விக்கெட்களையும் கார்த்திகேயன், பெரியசாமி மற்றும் கிஷோர் தலா ஒரு விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com