

லண்டன்,
ஒரே விம்பிள்டன் தொடரில் இரண்டு பட்டங்களை வென்று இரட்டை சாதனை படைக்க காத்திருக்கிறார் மார்செலோ அரேவலோ.
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில், ஆஸ்டாபென்கோ - அரேவலோ ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஸ்டார்ம் ஹண்டர் மற்றும் மார்க் போல்மன்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்த அந்த ஜோடி, அதன்பிறகு சிறப்பாக மீண்டு வந்து அடுத்த இரு செட்களையும் 7-5, 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி, 4-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
35 வயதான மார்செலோ அரேவலோ, விம்பிள்டன் வரலாற்றில் பட்டம் வென்ற முதல் எல் சால்வடார் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். மேலும், இது அவரது 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதற்கு முன்பு 2022 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சு ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
இதனிடையே, நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள விம்பிள்டன் ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியிலும், குரோஷியாவின் மேட் பாவிக்குடன் இணைந்து மார்செலோ அரேவலோ களமிறங்க உள்ளார். இதன் மூலம் ஒரே விம்பிள்டன் தொடரில் இரண்டு பட்டங்களை வெல்லும் வாய்ப்பு அவருக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.