வைபவ் சூர்யவன்ஷி அதிரடி: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.
வைபவ் சூர்யவன்ஷி அதிரடி:  ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
Published on

ஹராரே,

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் (ஜூலை 23, 25 மற்றும் 26-ந் தேதி) பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா - ஜிம்பாப்வே மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.ஜிம்பாப்வே அணியில் வெஸ்லி மதேவேரே சிறப்பாக விளையாடி 39 ரன்கள் குவித்தனர். இதனால் ஜிம்பாப்வே 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் பிரின்ஸ் யாதவ் , மயங்க் யாதவ் தலா 2 விக்கெட், சிவம் துபே, ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன் இருவரும் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இஷான் கிஷன் 35 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயாஷ் அய்யர் 28 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 13.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com