ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா அணிக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை

ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா அணிக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என விதர்பா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
Image Courtesy: @BCCIdomestic
Image Courtesy: @BCCIdomestic
Published on

நாக்பூர்,

90-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் விதர்பா - கேரளா அணிகள் ஆடின. இதில் முதல் இன்னிங்சில் விதர்பா 379 ரன்னும், கேரளா 342 ரன்னும் எடுத்தன. தொடர்ந்து 37 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய விதர்பா 375 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தை டிராவில் முடித்து கொள்ள இரு கேப்டன்களும் ஒப்புகொண்டனர்.

விதர்பா முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் காரணமாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது டேனிஷ் மலேவருக்கும், தொடரின் தொடர் நாயகன் விருது ஹார்ஷ் துபேவுக்கும் வழங்கப்பட்டது. இந்நிலையில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் சூடிய விதர்பா அணிக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என விதர்பா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், ஒரே சீசனில் 69 விக்கெட்டுகள் வீழ்த்தி அமர்க்களப்படுத்திய சுழற்பந்து வீச்சாளர் ஹார்ஷ் துபேவுக்கு ரூ.25 லட்சமும், இந்த தொடரில் ரன்கள் குவித்த யாஷ் ரதோட் (960 ரன்), கருண் நாயர் (863 ரன்) ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. அத்துடன் தலைமை பயிற்சியாளர் உஸ்மான் கானிக்கு ரூ.15 லட்சமும், உதவி பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com