ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன்சிங் அறைந்த வீடியோ...17 ஆண்டுகளுக்கு பிறகு வைரல்

17 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது சீசனில் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்ற பிறகு திடீரென மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னத்தில் கைவைத்தபடி ஸ்ரீசாந்த் அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. ஆனால் இது தொடர்பான வீடியோ காட்சி மறைக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த சீசனில் எஞ்சிய 11 ஆட்டங்களிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட ஹர்பஜன்சிங்குக்கு தடை விதித்தது. அதன் பிறகு பலக்கட்டங்களில் ஹர்பஜன் சிங்கிடமும் சரி, ஸ்ரீசாந்திடமும் சரி எதற்காக இருவரிடையே சண்டை ஏற்பட்டது என கேட்கப்பட்ட போது பதில் சொல்லாமல் சிரித்தே மழுப்பினர்.
இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஆட்டம் முடிந்து வீரர்கள் கைகுலுக்கும் போது, ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அடிப்பதும், பிறகு இருவரும் ஒருவரையொருவர் அடிப்பார் போல் பாயும் போது நடுவர்கள், சக வீரர்கள் சமாதானப்படுத்துவதும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.






