விராட் கோலி அபார சதம்.. தென் ஆப்பிரிக்க அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா

கேப்டன் கே.எல்.ராகுல் 60 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
image courtesy:BCCI
image courtesy:BCCI
Published on

ராஞ்சி,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். தென் ஆப்பிரிக்க அணியின் வழக்கமான கேப்டன் பவுமாவுக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக மார்க்ரம் தெரிவித்தார். இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பிடித்தனர்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 25 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஜெய்ஸ்வால் 18 ரன்களில் கேட்ச் ஆனார்.

இதனையடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை திறம்பட சமாளித்த இந்த ஜோடி சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு வலு சேர்த்தது. 2-வது விக்கெட்டுக்கு 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ரோகித் சர்மா 57 ரன்களில் அவுட்டானார்.

பின்னர் வந்த கெய்க்வாட் (8 ரன்கள்), வாஷிங்டன் சுந்தர் (13 ரன்கள்) நிலைக்கவில்லை. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் விராட் கோலி நிலைத்து விளையாடி அணிக்கு வலு சேர்த்தார். இதனையடுத்து விராட் கோலி உடன் கேப்டன் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தார்.

தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை திறம்பட சமாளித்த விராட் கோலி பவுண்டரி அடித்து சதத்தை எட்டினார். ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவரது 52-வது சதமாக பதிவானது. சதம் அடித்த பிறகு சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய விராட் 135 ரன்களில் (120 பந்துகள்) கேட்ச் ஆனார். விராட் கோலி - கே.எல்.ராகுல் ஜோடி 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இறுதி கட்டத்தில் கே.எல்.ராகுல் - ஜடேஜா பார்ட்னர்ஷிப் இந்திய அணி 300 ரன்களை கடக்க உதவியது. சிறப்பாக ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் 60 ரன்கள் (56 பந்துகள்) அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கடைசி ஓவரின் 4-வது பந்தில் ஜடேஜா 32 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த அர்ஷ்தீப் சிங் சந்தித்த முதல் பந்திலேயே போல்டானார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது. ஹர்ஷித் ராணா 3 ரன்களுடனும், குல்தீப் யாதவ் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன், பர்கர், கார்பின் போஷ் மற்றும் ஓட்னீல் பார்ட்மேன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com