சிட்னியில் அசத்திய விராட், ரோகித்.. நேரலையில் கண்ணீர் விட்ட ஆஸி.வர்ணனையாளர்.. நெகிழ்ச்சி வீடியோ

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது.
சிட்னி,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த தொடரின் மூலம் இந்திய முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 7 மாதத்துக்கு பிறகு சர்வதேச போட்டிக்கு திரும்பினர். இந்த வாய்ப்பில் முதல் போட்டியில் சொதப்பிய ரோகித் கடைசி 2 போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். மறுமுனையில் விராட் கோலி முதல் 2 போட்டிகளில் டக் அவுட் ஆகி ஏமாற்றினாலும் கடைசி போட்டியில் சிறப்பாக ஆடி தனது தரத்தை நிரூபித்தார்.
இருப்பினும் அவர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டும் விளையாடுவதற்கு அதிகம் வாய்ப்பில்லை. இதனால் போட்டியின் முடிவில் தங்களுக்கு ஆதரவளித்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் அனைவருக்கும் விராட் மற்றும் ரோகித் இருவரும் நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில் சிட்னி போட்டியில் விராட், ரோகித் ஆட்டத்தை பினிஷிங் செய்தபோது ஆஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சியின் வர்ணனையாளர் உணர்ச்சி பொங்க அழுத நெகிழ்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






