நாங்கள் இருவரும் சுதந்திரமாக விளையாட வேண்டும் என்று முடிவு செய்தோம் - சர்பராஸ் கான்

இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

பெங்களூரு,

இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 2வது நாள் ஆட்டத்தில் டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 46 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் அபார செயல்பட்டு 402 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து 366 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டை இழந்து 231 ரன்கள் எடுத்திருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

இந்நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா தனது 2வது இன்னிங்சில் 462 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சர்பராஸ் கான் 150 ரன், ரிஷப் பண்ட் 99 ரன் எடுத்தனர். இதன் காரணமாக 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

ஜஸ்ப்ரீத் பும்ரா 4 பந்துகள் வீசிய நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக 4ம் நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது. 5ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், இன்றைய ஆட்டத்திற்கு பின் சர்பராஸ் கான் அளித்த பேட்டியில் கூறியதாவது, ரிஷப் பண்ட் காலில் அடிபட்டு இருக்கின்ற காரணத்தினால் மெதுவாக ஓடி ரன்கள் எடுக்கலாம் என்று நாங்கள் ஏற்கனவே பேசி வைத்திருந்தோம்.

குறிப்பிட்ட அந்த ரன் ஓடும் பொழுது இரண்டு ரன் எடுக்கலாம் என்று நான்தான் முதலில் கூறினேன். பிறகு தான் எனக்கு அவருடைய முட்டி வலி பற்றி ஞாபகம் வந்தது. அதனால்தான் நான் தடுத்து நிறுத்தினேன். நல்லவேளை அவர் அவுட்டில் இருந்து தப்பித்து விட்டார். நாங்கள் இருவரும் சுதந்திரமாக விளையாட வேண்டும் என்று முடிவு செய்தோம். ரிஷப் பண்ட் அவருடைய வழியில் விளையாடினால் என்ன செய்வார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

எனவே நான் அவருக்கு சிங்கிள் கொடுக்க விரும்பினேன். இந்த விக்கெட்டில் ரன் எடுப்பது எளிதானது கிடையாது. பந்து திரும்பிக் கொண்டிருக்கிறது. நாங்கள் உள்ளே வந்து இரண்டு மூன்று விக்கெட்டுகளை ஆரம்பத்தில் எடுத்தால் நியூசிலாந்து அணிக்கு அழுத்தம் ஏற்படுத்தி வெல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com