நாங்கள் தொடர் முழுவதும் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம் - கேப்டன் ரோகித் சர்மா

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
image courtesy: @BCCI
image courtesy: @BCCI
Published on

துபாய்,

9வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. அவர் இந்த ஆட்டத்தில் 76 ரன்கள் அடித்தார்.

இந்நிலையில், ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது, இது மிகவும் நன்றாக இருக்கிறது. நாங்கள் தொடர் முழுவதும் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். அதன் பலனாக வெற்றி முடிவு எங்கள் பக்கம் வந்தது சிறந்த உணர்வைக் கொடுக்கிறது. அதிரடியாக விளையாடும் ஸ்டைல் எனக்கு இயற்கையானது கிடையாது. ஆனால், அதை நான் செய்ய விரும்பினேன். நீங்கள் எதையாவது புதிதாக முயற்சிக்கும் போது அணி நிர்வாகத்தின் ஆதரவு உங்களுக்கு வேண்டும்.

அதை 2023 உலகக் கோப்பையில் ராகுல் டிராவிட்டும், தற்போது கவுதம் கம்பீரும் எனக்குக் கொடுத்தார்கள். அவர்களுடைய ஆதரவால் சமீப வருடங்களில் நான் வித்தியாசமாக விளையாடினேன். வித்தியாசமாக விளையாடி வெற்றியைப் பெற முடியுமா என்று பார்த்தேன். துபாயில் சில போட்டிகளில் விளையாடியது பிட்ச்சின் இயற்கைத் தன்மையை புரிந்துகொள்ள உதவியது. கால்களைப் பயன்படுத்தி இறங்கி சென்று அடிப்பதை நீண்ட காலமாக செய்து வருகிறேன்.

அந்த வகையில் விக்கெட்டையும் இழந்துள்ளேன். ஆனால் அதற்காக பின்வாங்கியதில்லை. அது ஆட்டத்தை எளிதாகவும் சுதந்திரமாகவும் மாற்றுகிறது. ஜடேஜா 8-வது இடத்தில் பேட்டிங் செய்ய வருவார் என்பது டாப்பில் நீங்கள் அதிரடியாக விளையாடுவதற்கான தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com