ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் - ரஜத் படிதார்

பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வி கண்டது.
Image Courtesy: @IPL 
Image Courtesy: @IPL 
Published on

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 14 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பெங்களூரு தரப்பில் டிம் டேவிட் 50 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சென், சாஹல், ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் 12.1 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 33 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது டிம் டேவிட்டுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஆரம்பத்தில் இந்த ஆடுகளம் நிலைத்தன்மை இல்லாமல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுக்கும் சாதகமாக இருந்தது.

ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும். எங்கள் அணிக்கு பார்ட்னர்ஷிப்கள் முக்கியம். விரைவான இடைவெளியில் விக்கெட்டுகளை விரைவாக இழந்தோம். சூழ்நிலை காரணமாகத்தான் மூன்றாவது வரிசையில் களமிறங்கும் படிக்கல்லை விட்டுவிட்டு நாங்கள் விளையாடினோம்.

ஆடுகளம் அவ்வளவு மோசமாக இல்லை என்றாலும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களுக்கான பாராட்டுகளை நிச்சயமாக கொடுக்க வேண்டும். ஆடுகளம் எப்படி இருந்தாலும் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்து வெற்றி இலக்கை அடைய வேண்டும்.

எங்கள் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார்கள். அது மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயமாகும். அதுபோல பேட்டிங் பிரிவில் ஏற்பட்டுள்ள தவறுகளை சரி செய்து விரைவாக வெற்றிப்பாதையை அடைய வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com