வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான நாங்கள் பவுண்டரி ஹிட்டர்கள் - ரோவ்மன் பவல் பெருமிதம்

ஹெட்மயர் போன்ற வெஸ்ட் இண்டீசை சேர்ந்த வீரர்கள் பவுண்டரி ஹிட்டர்கள் என்று ரோவ்மன் பவல் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
image courtesy: twitter/@rajasthanroyals
image courtesy: twitter/@rajasthanroyals
Published on

சண்டிகர்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் திரில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா 31 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் கேஷவ் மகராஜ் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் 39 ரன்களும், தனுஷ் கோட்டியான் 24 ரன்களும் அடித்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் கேப்டன் சஞ்சு சாம்சன் 18, ரியான் பராக் 23, துருவ் ஜுரேல் 6, ரோவ்மன் பவல் 11 ரன்களில் அவுட்டானதால் ராஜஸ்தானின் வெற்றி கேள்விக்குறியானது.

ஆனால் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய சிம்ரோன் ஹெட்மயர் 6 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது 2 சிக்சர்களை பறக்க விட்டு அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தார். அந்த வகையில் 27 (10 பந்துகள்) ரன்கள் அடித்து பினிஷிங் செய்த அவர் 19.5 ஓவரில் ராஜஸ்தானின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்நிலையில் ஹெட்மயர் போன்ற வெஸ்ட் இண்டீசை சேர்ந்த வீரர்கள் பவுண்டரி ஹிட்டர்கள் என்று ரோவ்மன் பவல் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் தமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அசத்துவதற்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கும் அவர் இப்போட்டியில் கிடைத்த 2 புள்ளிகள் முக்கியம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கண்டிப்பாக 2 புள்ளிகளை பெற்றது முக்கியமானது. அதற்கான பாராட்டுகள் எங்களுடைய வீரர்களை சேரும். ஹெட்மயரும் நானும் அமைதியாக இருந்தோம். வேகமாக ரன்கள் ஓட வேண்டும் என்று பேசிக்கொண்டோம். வெஸ்ட் இண்டீசை சேர்ந்த நாங்கள் பவுண்டரி ஹிட்டர்கள். அது சவாலானதாகும். ஆனால் அதை செய்வதற்காகவே நாங்கள் கிரிக்கெட்டர்களாக உள்ளோம்.

பட்லர் மீண்டும் விளையாடுவதற்கு தேவையான வேலைகளை எங்களுடைய பயிற்சியாளர்கள் செய்கின்றனர். எனவே அவர் இன்னும் சில நாட்களில் விளையாட வருவார். அடுத்த போட்டிக்காக இன்னும் எங்களுக்கு 3 - 4 நாட்கள் உள்ளன. எனவே அவர் அதற்குள் குணமடைந்து வருவார். நான் நல்ல வீரர். ஒருவேளை எனக்கு விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் எங்களுடைய அணி நன்றாக செயல்படுகிறது அன்று அர்த்தம். எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது என்னுடைய சிறந்த செயல்பாட்டை கொடுக்க முயற்சிக்கிறேன்" என்று கூறினார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com