உலகக் கோப்பையின் முதன்மை போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் - ஷாண்டோ

உலகக் கோப்பையின் முதன்மை போட்டிகளில் நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடுவோம் என வங்காளதேச கேப்டன் ஷாண்டோ கூறியுள்ளார்.
Image Courtesy: @BCBtigers
Image Courtesy: @BCBtigers
Published on

நியூயார்க்,

20 அணிகள் கலந்துகொண்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 53 ரன்களும், பாண்ட்யா 40 ரன்களும் குவித்தனர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேசம் 20 ஓவர்களில் வெறும் 122 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்ததும் தோல்வி குறித்து வங்காளதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கூறியதாவது,

நாங்கள் பேட்டிங்கில் இன்று சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் உலகக் கோப்பையின் முதன்மை போட்டிகளில் நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடுவோம் என்று நினைக்கிறேன். நாங்கள் கடந்த காலத்தைப் பற்றி நினைப்பதில்லை. எனவே முதன்மைப் போட்டிகளில் நாங்கள் தைரியமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.

ஷோரிபுல் இஸ்லாம் காயத்தை சந்தித்ததால் பரிசோதனைக்கு சென்றுள்ளார். எங்கள் வீரர்கள் இந்த முதல் போட்டிக்கு மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். இதில் தோல்வியை சந்தித்தாலும் முதன்மைப் போட்டிகளில் அனைவரும் அமைதியாக இருந்து நன்றாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com