

சென்னை,
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றிய நிலையில், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. தொடர்ந்து நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ், 1-0 என்ற முன்னிலையுடன் இரண்டாவது டெஸ்டில் களமிறங்கியது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 3-ம் தேதி தொடங்கியது. போட்டியின் கடைசி நாளில் இலங்கை தனது 2-வது இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 251 ரன்களில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 302 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜான் கேம்ப்பெல் மற்றும் பிராண்டன் கிங் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அணி 89 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. நீண்ட நேரம் மழை நீடித்ததால் போட்டி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
பின்னர் மாலை நேரத்தில் ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டநிலையில், போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த டிராவின் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.
தோல்வி தொடர்பாக பேசிய இலங்கை கேப்டன் தனஞ்ஜெய டி சில்வா கூறியதாவது,
முந்தைய ஆட்டத்தின் ஆடுகளத்தை விட இது சற்று வறண்டதாக இருந்தது. நான்காவது இன்னிங்ஸ் ஆட்டத்தின் நிலையும் என் மனதில் இருந்தது. எனவே, முதலில் பேட்டிங் செய்ய எடுத்த முடிவு சரியானது என்றே கருதுகிறேன். ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக அந்தளவுக்குத் திரும்பவில்லை (சுழலவில்லை). மேலும், 140-145 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் ஒருவரும் எங்களிடம் இல்லை. நாங்கள் எடுத்த ரன்கள் போதுமானதாகவே இருந்தன. ஆனால் பந்துவீச்சு குறித்து, நாங்கள் மறுஆய்வு செய்வோம். ( எந்த நேரத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய அந்தத் தனித்திறன் கொண்ட ஒருவர் அணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என தெரிவித்தார்.