

சென்னை,
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாச்த்தில் வென்றது. வெற்றிக்கு பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:
முதல் ஏழு அல்லது எட்டு ஓவர்களுக்கு பிறகு பிச்சின் தன்மை மிகவும் மாறியது. பந்து சுழலத் தொடங்கியது, சில நேரங்களில் நின்று சென்றது. ஆரம்பத்தில் 220 அல்லது 210 ரன்கள் அடிப்போம் என நினைத்தோம். ஆனால் பின்னர் 190 அல்லது 180 இருந்தாலே நல்ல ஸ்கோர் என்று எண்ணினோம். பந்துவீச்சில் நல்ல பவர்ப்ளே கிடைக்க வேண்டும் என்பதே முக்கியம். அதன் பிறகு ரன் ரேட்டை கட்டுப்படுத்துவது மட்டுமே வேலை. பந்து வீச்சு சிறப்பாக இருந்தது” என்றார்.
அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள் பற்றி பேசிய ருதுராஜ், மெதுவாக எல்லாம் சரியாக அமைந்து வருகிறது என்று உணர்கிறேன். ஒவ்வொருவரும் தங்களது பங்கு என்ன, எந்த ஓவரில் என்ன பந்து வீச வேண்டும், எந்த லெந்த்தில் வீச வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ளனர். நாங்கள் மெதுவாக மேம்பட்டு வருகிறோம். இது நல்ல அறிகுறி” என்றார்.
தனது மோசமான பார்ம் பற்றி பேசிய கெய்க்வாட் கூறியிருப்பதாவது: பேட்டிங் செய்யும் போது அது மனதில் இருந்தது. இப்போது நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். அணிக்கு என்ன தேவை, சூழ்நிலைக்கு என்ன தேவை என்பதைச் செய்வதே முக்கியம். மனதளவிலும் நல்ல நிலையில் இருக்கிறேன், நேர்மறையாக இருக்கிறேன். ஒரு பெரிய இன்னிங்ஸ் விரைவில் வரும். மற்ற வீரர்கள் சப்போர்ட்டாக இருக்கிறார்கள்” என்றார்.