என்னுடைய விக்கெட் விழுந்ததும் ராஜஸ்தான் அணி ஆட்டத்திற்குள் வந்து விட்டது - தோல்வி குறித்து பாண்ட்யா கருத்து

ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 54 ரன்கள் எடுத்தார்.
Image Courtesy: Twitter 
Image Courtesy: Twitter 
Published on

மும்பை,

நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக பாண்ட்யா 34 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட், சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 54 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் என்னுடைய விக்கெட் விழுந்ததும் ராஜஸ்தான் அணி ஆட்டத்திற்குள் வந்து விட்டது என பாண்ட்யா கூறியுள்ளார். இது தொடர்பாக போட்டி முடிந்த பின்னர் பாண்ட்யா அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்த இரவு உண்மையிலேயே எங்களுக்கு கடினமாக இருந்தது. நாங்கள் இந்த போட்டியில் பேட்டிங்கின்போது சிறப்பாக ஆரம்பிக்கவில்லை. விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்த வேளையில் நான் கவுண்ட்டர் அட்டாக் செய்து விளையாட நினைத்தேன்.

ஒரு கட்டத்தில் நாங்கள் 150 முதல் 160 ரன்கள் வரை வரும் அளவிற்கு நல்ல நிலையில் தான் இருந்தோம். ஆனால் என்னுடைய விக்கெட் விழுந்த பின்னர் ராஜஸ்தான் அணி முழுவதுமாக ஆட்டத்திற்குள் வந்து விட்டது. நான் இன்னும் அணிக்காக நிறைய செய்ய வேண்டி இருந்தது.

இதுபோன்ற மைதானத்தில் தோல்வி என்பது எதிர்பாராத ஒன்று தான் இருப்பினும் நிச்சயம் இதிலிருந்து திரும்ப வர முடியும் என்று நினைக்கிறேன். ஒரு அணியாக நாங்கள் இன்னும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com